சில்லென்ற சில வெண்மேகங்களும்....
சில்லென்ற சில வெண்மேகங்களும், நீண்ட பெருமூச்சும்.
---------------------------------------------
நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள், மீண்டும்.ஏனோ எழுதுவது பிடித்திருக்கவில்லை 2 மாதங்களாக.
காரணம் மனநிலையும், அரைநொடியும் ஆசுவாசப்படுத்திக்கொள்ள இடங்கொடுக்க இயலாத வேலைகளும்.
சில்லென்ற வெண்மேகங்கள் என் பயணமுழுதும் என் நண்பர்களாய் உரசிக்கொண்டே வந்தன. நான் உறங்கும்போதும் அவை என்னோடு கதை பேசிக்கொண்டிருந்தன. சில் நேரங்களில் நான் அவைகளின் பேச்சுக்கு மறுமொழி உரைக்கவில்லை.
நான் கடந்த காலங்களில் எழுதிக்கொண்டிருந்த மனநிலையை இன்று எண்ணிப்பார்த்தால்,
வெட்கமும், இவையெல்லாம் சரிதானா என்ற கேள்வியும் மிஞ்சியுள்ளது.
இப்படித்தான் திரிந்துகொண்டிருந்தேன்.
நான், என் வாளை எடுத்துக்கொண்டு அலைந்ததுண்டு.
யார் தலையாவது எப்போதாவது குனியாதா
அப்போது ஒரு வீச்சு
வீசலாம் என்று.
எத்தனையோ என்னுடைய தலைகளும்
உருண்டு ஓடுவதை பார்த்ததுண்டு.
இந்த எழுத்துக் காட்டாற்றின் வேகம்தான் எத்தனை
என்று மார்பிலே தாங்கி, மூச்சினைப் பிடித்துக்கொண்டு
நேராய் நடந்ததுண்டு.
இன்னொருவரையோ, எந்த அளவுக்கு நேர்மையாய் எழுதுகிறார் என்று
சோதித்துவிடலாம் இன்று.
இப்படியும் சில நாட்கள் அலைந்ததுண்டு.
இன்னொருவர், எந்த நூல் நேர்க்கோட்டைப் பிடித்துக்கொண்டு
இப்படி வேகமாய் எழுதுகிறார்.
அவருடைய இந்த நூலைக் கத்தரித்துவிடுகிறேன்,
பிறகு என்ன செய்கிறார் என்று பார்க்கிறேன்.
இன்னொருவரோ மிகுந்த வீரத்துடன் எழுதுகிறாரே.
இப்படித்தான் எல்லா நேரத்திலும் இருப்பாரா?
சற்று அமைதியாய் இவரை கவனித்துப்பார்க்கிறேன்.
இவருக்கு என்னதான் வேண்டும்?
இவர் எதைப் பரப்ப முயற்சிக்கிறார்?
அந்த கடைசிக் கோபுரக் கல்லை
இப்போதே உடைக்கிறேன்!
இவ்விதமாய் பல பல எழுத்துக்கள்
வாதங்கள், அடிதடிகள்.
சில நேரத்தில்
இவையெல்லாம் தேவையில்லை இனி
என்று தீர்மானமாய் நினைப்பதுண்டு.
இனி என்ன செய்வது என்று தெரியவில்லை.
எழுதுவது என்று ஒருபாதி மனமும்
மறுபாதி கைகளைப்பிசைந்துகொண்டும்.
எழுதவா? எழுதவா? எழுத வா?
------------------------
என்னை ஏற்கனவே இணையத்தில் விசாரித்த அன்புள்ளங்களுக்கு நன்றி.